
சொற்களின் பின்னே ஒளிந்துக் கொண்டு
பொய்களின் முலாம் பூசிய
நமக்கிடையேயான சொல்லாடல்களில்
எந்நேரத்திலும் வந்துவிடக்கூடுமென
காத்திருந்தேன்
சேதியை சுமந்து வரும் வினாடிக்கு...
வினாடியாய் வரைந்த கவிதையை
நெஞ்சோடு நிறுத்தி வைத்தேன்
கரை புரண்டு ஓடிவிடுமென,
சுமை இறக்கும் நேரத்தில்
பரிசளிக்க..
சுமையாய் விரைந்த நொடிகளுக்கிடையே
இதோ வந்துவிட்டதென
நான் மலரும் நொடிகளெல்லாம்
காற்றோடு கரைந்துப் போயின
கானல் நீரினும் வேகமாய்..
கானல் நீரென தெளிந்து
இனி எப்போதும் வாராதென
நெஞ்சோடு புதைத்து வைத்தேன்
உனக்காக எழுதிய
பொய்கள் நீக்கப்பட்ட அக்கவிதையை..
புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..