
உயிர்வாழ்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..
விரலிடுக்கில்
விரைந்தோடும் தண்ணீராய்
என் கடைசி இரவின்
கண்ணீர் கணங்கள்..
மூடிய விழிகளுக்குள்
தோற்றலுக்கான காரணங்கள்
செந்தழலாய் நடனமாட..
சாட்சியாய் நின்ற நிலவு
இறங்கி வந்து
முகம் துடைத்தது..
பன்னீர் துளிகளின்
சில்லென்ற தொடுகையில்
விழி திறந்தேன்
நிலவில் பிரதிபலித்தது
என் முகம்..
விண்மீன்கள்
வழி காட்ட
வானம் ஏறினேன்..
நிலவாய் நான்..
முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..
உயிர்விடுத்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..
மெல்ல இறங்கிவந்தேன்
முழுமதியாய்..


